
கோலாலம்பூர், ஜூலை-16-ஹாங்காங்கில் மூன்று கிலோகிராம் கஞ்சா மொட்டுக்களுடன் 19 வயது மலேசிய இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவ்விளைஞர் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் போதைப்பொருள் கடத்துபவராகப் பணியமர்த்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குனர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
சரவாக்கைச் சேர்ந்த அந்த நபருக்கு மலேசியாவில் எந்தக் குற்றப்பதிவும் இல்லை என்பது சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதை முன்னதாக ஹாங் காங் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக ஹுசேன் ஓமார் கான் மேலும் கூறினார்.
அவ்விளைஞர் எடுத்துச் சென்றிருந்த பயணப் பையில் மூன்று கிலோகிராம் கஞ்சா மொட்டுக்கள் கண்டறியப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் RM260,000 இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் இம்மாதம் 9 அன்று ஹாங் காங் அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்தார். அவர் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வழியாக வந்ததாக ஹாங் காங் சுங்கத்துறை முன்னதாக ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.



