
நீலாய், ஜூலை-17-பள்ளிகளில் நிகழும் பகடி வதைச் சம்பவங்கள் மற்றும் இனரீதியான அவமதிப்புகள் உள்ளிட்ட ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
அவை தற்போதுள்ள கல்வி முறையின் பலவீனங்களைப் பிரதிபலிக்கின்றன. சமய வகுப்புகளும், சமயக் கல்வி போதனைகளும் ஆக்ககரப்படுத்தப்பட்டிருந்தாலும் கட்டொழுங்குப் பிரச்னைகள் தற்போது தலைதூக்கியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் பகடி வதைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனை அனுமதிக்க முடியாது. அது ஒரு நோயாக மாறி விடும். இதனைக் களைவதற்குதான் கல்வியில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தின் அடிப்படையில் மனிதநேயத்தைக் கட்டியெழுப்புவதே கல்விதான் என அன்வார் கூறினார்.
இதனிடையே, பகடி வதைகளால் பாதிக்கப்படும் மாணவர்களின் நலனைப் பாதுகாப்பதை விட்டு விட்டு பள்ளியின் நற்பெயரைப் பேணுவதில் அதிக நாட்டம் காட்டும் பள்ளி நிர்வாகங்களை பிரதமர் கண்டித்தார். இது மாற்றப்பட வேண்டும்.
பள்ளியில் நிகழும் பகடி வதைச் சம்பவத்தை வெளிப்படுத்தினால் அது ஒரு தலைமை ஆசிரியரின் அல்லது முதல்வரின் தோல்வி அல்ல. பகடி வதைச் சம்பவம் மறைக்கப்படும் போது அல்லது பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும், பிரச்சினைக்குத் தீர்வு காணவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத போதுதான் அது தவறாகிறது என அன்வார் சுட்டிக் காட்டினார்.
கல்வி வளாகங்கள் அறிவைப் பெறும் இடங்களாக இருப்பதை உறுதிச் செய்வதோடு மட்டுமல்லாமல், விசுவாசம், ஒழுக்கம் மற்றும் சக மனிதர்களிடம் கருணை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கும் பெரும் பொறுப்பை கல்வியாளர்கள் கொண்டுள்ளனர் என்றாரவர்.
நீலாய் கல்வி வளாகத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்வி மையத்தில் ஆசிரியர் கல்விக் கழக மாணவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் பிரதமர் அவ்வாறு தெரிவித்தார். அந்நிகழ்வில் கல்வி அமைச்சர் Fadhlina Sidekக்கும் கலந்து கொண்டார்.



