
ஷா ஆலாம், ஜூலை.31- சிலாங்கூர், Port Klangங்கில் Taman Teluk Gedung Indah பகுதியில், வளர்ப்பு நாய் ஒன்று சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படுது குறித்து விசாரணை நடத்துமாறு விலங்குகள் நல அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. Rocky என்றழைக்கப்படும் அந்த நாய், புதன்கிழமை இரவு பிடிக்கப்படுவதற்கு முன் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டதாக ‘Persatuan Haiwan Terbiar Malaysia’ அமைப்பின் தலைவர் கலைவாணன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
நாயை விடுவிக்குமாறு அதன் உரிமையாளர் கெஞ்சிக் கேட்டும், அந்தக் கும்பல் நாயின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்றது. அதனால் அந்த நாய் உயிரிழந்ததது. அப்போது கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் இரு அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்ததாக கலைவாணன் கூறினார்.
அந்த அதிகாரிகள் ஏன் சம்பவத்தைத் தடுக்கவில்லை, அந்த ஆடவர் கும்பல் அவ்வதிகாரிகளின் அறிவுறுத்தல், ஒப்புதல் அல்லது அவர்கள் அறிந்துதான் செயல்பட்டதா என்பது விளக்கப்பட வேண்டும். அதோடு விலங்குகளைப் பிடிக்கும் போது அவற்றுக்கு காயத்தையோ உயிரிழப்பையோ ஏற்படுத்தக்கூடாது. அச்சம்பவம் மீதான காணொளிப் பதிவும் இருப்பதாக கலைவாணன் குறிப்பிட்டார்.
இவ்வேளையில் அது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதையும், விசாரணை நடைபெற்று வருவதையும் Klang Selatan காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.



