
கோலாலம்புர், ஆகஸ்ட் 6 – கூட்டு பணம் தொடர்பான பிரச்சினையால் கடந்த ஜூலை 20 முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட கணவன்-மனைவி இன்று காவல்துறையில் சரணடைந்தனர்.
இதையடுத்து, அவர்களை ஜித்ரா நீதிமன்றம் நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
39 மற்றும் 36 வயதுடைய இந்த தம்பதியர் மீது மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக மலேசிய குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, தம்பதியரும் அவர்களது குழந்தையும் காணாமல் போனதாக பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் அளித்திருந்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் வீட்டிற்கு வந்து மீண்டும் வெளியேறிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், 23 வயது இளைஞர் ஒருவர் கூட்டு பணத்தில் 25,000 ரிங்கிட் இழந்ததாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு கூட்டு பண மோசடியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.



