
ஜகார்த்தா, ஆகஸ்ட்-15,வெளிநாடுகளில் வாழும் உயர் திறமையாளர்களை ஈர்க்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை வழங்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2027 பட்ஜெட் உரையை நிகழ்த்திய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ, குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர தமதரசு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
என்றாலும், மருத்துவர்கள், AI நிபுணர்கள், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் தடகள வீரர்கள் போன்ற மிக முக்கிய திறமையாளர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அனைத்துலக அளவில் பணியாற்றும் நாட்டின் சிறந்த மனிதவளம், தாய்நாட்டுடனான தொடர்பை இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகக் கூடாது என்றும் அதிபர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் அதற்காக, அனைவருக்கும் இந்த உரிமை வழங்கப்படாது; மாறாக, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை சோதனைகளுக்கு பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த இரட்டைக் குடியுரிமை அனுமதிக்கப்படும் என்றும் பிராபோவோ தெளிவுபடுத்தினார்.
இந்தோனேசிய சட்டத்தின்படி, தற்போது பெரியவர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருக்க முடியாது; அதே சமயம், 2 கடப்பிதழ்களை வைத்திருக்கும் குழந்தைகள், 18 வயதை அடைந்ததும் ஒற்றைக் குடியுரிமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



