
கோலாலம்பூர், ஆகஸ்ட்-21-பெர்ஜாயா குழுமத்தின் நிறுவனர் தான் ஸ்ரீ வின்சன்ட் தான், விமானி இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் ‘EH216-S’ எனும் மின்சார ஆகாய டேக்ஸியில் (eVTOL) பறந்த முதல் மலேசியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
பெர்ஜாயா கார்ப்பரேஷனின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், வின்சன்ட் தான் இந்த தானியங்கி ஆகாய டேக்ஸியில் பயணிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தனது பயண அனுபவத்தைத் தனது கைபேசியிலேயே பதிவுச் செய்த அவர், வழக்கமான ஹெலிகாப்டர்களை விட இது மிகவும் வசதியாகவும் சத்தமில்லாமலும் இருப்பதாகப் பாராட்டினார்.
மேலும், அதிக சத்தம் இல்லாததால் _headphone_ கள் கூட அணியத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாரம்பரிய ஓடுபாதைகளோ அல்லது விமானிகளோ தேவையின்றி நகர்ப்புறங்களில் பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘EH216-S’ ஆகாய டேக்ஸி, எதிர்கால நகர்ப்புற வான்வழிப் போக்குவரத்தில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
அதிநவீன தொழில்நுட்பத்தை நேரடியாகப் சோதித்துப் பார்த்த வின்சன்ட் தானின் இந்த முயற்சிக்கு இணையத்தில் பரவலான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



