
கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – திருஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலேசிய மலையாளிகள் அனைவருக்கும் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் இனிய ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகை மனிதநேயம், ஒற்றுமை மற்றும் பண்பாடுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார். வீடு சுத்தம் செய்தல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புத்தாடை அணிதல், பெரியோரை வணங்குதல், ஆலயத்திற்குச் செல்வது உள்ளிட்ட ஒவ்வொரு பாரம்பரியத்திற்கும் ஆழமான அர்த்தங்கள் உள்ளதாக அவர் கூறினார்.
பல இன மக்கள் வாழும் மலேசியாவில், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தாரக மந்திரத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து திருஓணத்தை கொண்டாட வேண்டும் என்றும், ஆடம்பரத்தைத் தவிர்த்து சிக்கனமாக பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
பண்டிகைகளின் நோக்கம் நமது பண்பாடு மற்றும் பாரம்பரியங்களைப் பேணுவதுடன், மக்களிடையே ஒற்றுமையையும் அன்பையும் வளர்ப்பதே எனக் குறிப்பிட்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், அனைவரும் மகிழ்ச்சியுடனும் மனிதநேயத்துடனும் திருஓணத்தை கொண்டாட வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்துள்ளார்



