
டோக்கியோ, செப். 5 — ChatGPT போன்ற AI செயலிகளில் நாம் ஒரு கேள்வி கேட்கிறோம்… சில நொடிகளில் பதில் வந்துவிடுகிறது. ஆனால், அந்த ஒரு பதிலுக்குப் பின்னால் மின்சாரம் மட்டுமல்ல… தண்ணீரும் செலவாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
AI இயங்குவதற்கு உலகம் முழுவதும் பிரமாண்டமான தரவு மையங்கள் — Data Centres — செயல்படுகின்றன. அங்குள்ள ஆயிரக்கணக்கான சக்திவாய்ந்த கணினி சர்வர்கள் தொடர்ந்து இயங்குவதால் கடுமையான வெப்பம் உருவாகிறது. அவற்றைக் குளிர்விக்க மிகப் பெரிய அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது.இதன் அளவு எவ்வளவு தெரியுமா?
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழக ஆய்வின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் AI-க்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு, சஹாராவுக்குத் தெற்கிலுள்ள ஆப்பிரிக்காவின் சுமார் 130 கோடி மக்களின் நீர்த் தேவைக்கு நிகராகலாம்!
அதுமட்டுமல்ல. AI தரவு மையங்களில் குளிரூட்ட பயன்படுத்தப்படும் தண்ணீரில் பெரும்பகுதி ஆவியாகிவிடுவதால், அதனை மீண்டும் பயன்படுத்துவதும் சாத்தியமில்லை.
மின்சார பயன்பாடும் அதிர்ச்சியளிக்கிறது. ஒரு சாதாரண Google தேடலைவிட, Chatbot-இல் ஒரு கேள்வி கேட்பதற்கு சுமார் 10 மடங்கு அதிக மின்சாரம் தேவைப்படுவதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
அதனால்தான், AI-ஐ தேவைக்கேற்ப பயன்படுத்துமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சாதாரண தகவல்களுக்கு வழக்கமான இணையத் தேடலைப் பயன்படுத்தலாம்; தேவையில்லாமல் AI படங்கள், வீடியோக்களை உருவாக்குவதையும் தவிர்க்கலாம்.
AI நமது வேலையை எளிதாக்குகிறது… ஆனால் அதன் ஒவ்வொரு ‘கிளிக்’கிற்குப் பின்னாலும் இயற்கை வளங்களின் செலவும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.



