
ஹைதராபாத், செப்-08-கோலாலம்பூரிலிருந்து ஜெட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானமொன்று இந்தியாவின் சென்னை விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. அதன் இரண்டாவது இயந்திரத்தில் ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தொழில்நுட்பக் கோளாறே அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கோலாலம்பூரிலிருந்து பிற்பகல் 3.30 மணியளவில் அவ்விமானம் புறப்பட்டது. சம்பவத்தின் போது அந்த MH156 விமானத்தில் 186 பயணிகள் இருந்தனர். தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகச் சந்தேகித்த விமானி சென்னையில் அவசரமாகத் தரையிறங்கும் முன் அனுமதி கோரியதாக இந்திய விமான நிலைய ஆணைய (AAI) அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘The Hindu’ செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கிய பின்னர், அது parking bay-க்கு மாற்றப்பட்டது. பயணிகளுக்குத் தேவையான தங்குமிட ஏற்பாடுகள் விமான நிலையத்திலேயே செய்யப்பட்டன.
இரண்டாவது இயந்திரத்தில் ஏற்பட்டதாக நம்பப்படும் தொழில்நுட்பக் கோளாறை விமான நிறுவனத் தரப்பும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பக் குழுவினரும் ஆய்வு செய்து வருவதாக விமான நிலையப் பேச்சாளர் ஒருவர் PTI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.



