
ஜகார்த்தா, செப்டம்பர்-15,இந்தோனேசியாவில் அனாக் கிராகட்டாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பை செய்தியாக்கச் சென்ற 5 ஊடகவியலாளர்கள் உட்பட 8 பேரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 7-ஆம் தேதி, ஜகார்த்தாவுக்கு மேற்கே உள்ள பகுதியிலிருந்து விரைவுப் படகில் புறப்பட்ட இவர்கள், சுண்டா நீரிணையில் பயணித்தபோது தொடர்பை இழந்தனர்.
அந்தப் படகில் இந்தோனேசிய அரசு தொலைக்காட்சியான Antara, துருக்கியின் Anadolu உள்ளிட்ட ஊடகங்களைச் சேர்ந்த 5 செய்தியாளர்கள், 2 படகு ஊழியர்கள் மற்றும் ஒரு வழிகாட்டி ஆகியோர் பயணித்தனர்.
7 நாட்களாக நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இதுவரை எவ்வித தடயமும் கிடைக்கவில்லை என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், எரிமலையிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Enggano தீவில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம், விபத்தில் மாயமானவர்களில் ஒருவருடையதா என்பது குறித்தும் அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.



