
ஆயர் குரோ, ஆகஸ்ட்-14-இலக்கு வைக்கப்பட்டோருக்கான BUDI95 எரிபொருள் மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோலின் மாதாந்திர அளவை, மீண்டும் 300 லிட்டராக உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பி.கே.ஆர் இளைஞர் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த அளவு 200 லிட்டராகக் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பி.கே.ஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் காமில் முனிம் (Kamil Munim), உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் பட்சத்தில் இந்த வரம்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், நீண்ட தூரம் பயணம் செய்து வேலை செய்வோர் போன்ற அதிக பயன்பாடு தேவைப்படுவோருக்கு 350 லிட்டர் வரை நெகிழ்வுத்தன்மையுடன் வழங்க அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த அக்டோபர் மாதம் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, தகுதியுள்ள மலேசியர்கள் ஒரு லிட்டர் RON95 பெட்ரோலை RM1.99 மானிய விலையில் மாதம் 300 லிட்டர் வரை வாங்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மக்களின் நடப்புப் பொருளாதாரச் சூழ்நிலைக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் கூடியக் கொள்கைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என, மலாக்கா ஆயர் குரோவில் நடைபெற்ற அப்பிரிவின் மாநாட்டில் பேசியபோது காமில் வலியுறுத்தினார்.



