நியூயார்க், மார்ச் 29 – உலகின் இரண்டாவது மிகப் பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான FTX வாடிக்கையாளர்களின் 800 கோடி டாலர்களை திருடிய குற்றத்திற்காக, அந்நிறுவனத்தின் தோற்றுனரும், முன்னாள் உலக கோடிஸ்வரர்களில் ஒருவருமான சாம் பேங்க்மேன் – ப்ரைட்டுக்கு, 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கு விசாரணையின் போது, FTX வாடிக்கையாளர்கள் உண்மையில் பணத்தை இழக்கவில்லை என கூறியிருந்த பேங்க்மேன் – ப்ரைட்டின் கூற்றை நிராகரித்ததோடு, வழக்கு விசாரணையின் போது பொய் சொன்னதாக குற்றம்சாட்டி அவருக்கு மன்ஹாட்டன் நீதிமன்றம் அந்த தண்டனையை விதித்துள்ளது.
2022-ஆம் ஆண்டு FTX வீழ்ச்சியிலிருந்து உருவான ஏழு மோசடி மற்றும் சதிநாச செயல் தொடர்பான வழக்குகளில், 32 வயது பேங்க்மேன் – ப்ரைட் குற்றவாளி என கடந்தாண்டு நவம்பர் இரண்டாம் தேதி நீதிமன்றம் உறுதிச் செய்தது.
அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்றாக, FTX கிரிப்டோகரன்சி மோசடி கருதப்படுகிறது.
மிகப் பெரிய கோடிஸ்வரர், தொழில்முனைவர் மற்றும் முக்கிய அரசியல் நன்கொடையாளர் என்ற நிலையிலிருந்த பேங்க்மேன் – ப்ரைட்டின் வீழ்ச்சியின் உச்சகட்டத்தை அந்த தண்டனை குறிக்கிறது.
எனினும், அந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பேங்க்மேன் – ப்ரைட் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.