
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30 – தேசிய இருதய நிறுவனமான (IJN) துறைத் தலைவருக்கு எதிராக, மருத்துவர்கள் உட்பட பல பெண் ஊழியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாகக் குற்றஞ்சாட்டி கோலாலம்பூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகார்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாலியல் தொந்தரவு உடல்ரீதியானதா அல்லது வாய்மொழி மூலம் நிகழ்ந்ததா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
புகார்களை வாப்பஸ் பெறுமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எதிர்காலத்தில் வேறு ஊழியர்களும் இதுபோன்ற தொந்தரவுக்கு ஆளாகக் கூடாது என்பதால் அவர்கள் அதனை மறுத்துள்ளனர். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்ட ஆலோசனையும் பெற்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் தற்போது விடுப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து IJN, குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இவ்விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கருதி, சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அனைத்து புகார்களும் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப கையாளப்படுவதாகவும் IJN கூறியுள்ளது. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



