கோலாலம்பூர், ஏப்ரல்-3, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை JAKIM-மின் கீழ் செயல்படும்
அனைத்து சமயத்தாருக்கு இடையிலான நல்லிணக்கச் செயற்குழு அவசரக் கூட்டமொன்றை நடத்தவிருக்கிறது.
KK Mart கடைகளுக்கு எதிரான தொடர் தாக்குதல்கள் உட்பட, இன – மத உணர்வைத் தூண்டும் வகையிலான அண்மையச் சம்பவங்கள் குறித்து விவாதிப்பதை அந்த அவசரக் கூட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.
ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ மொஹமட் நாயிம் மொக்தார்
கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அதனைக் கூறியுள்ளனர்.
நாடு மற்றும் நாட்டு மக்களின் நல்லிணக்கத்தைப் பேணுவதற்குண்டான உடனடி நடவடிக்கைகள் குறித்து அக்கூட்டம் விவாதித்து முடிவெடுக்கும்.
தேசிய நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அது யாராயினும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.
KK Mart கிளைக் கடையொன்றில் சர்ச்சைக்குரியக் காலுறைகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததில் இருந்து, இதுவரை 3 KK Mart கடைகள் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றன.
பேராக் பீடோர், பஹாங் குவாந்தான் மற்றும் ஆகக் கடைசியாக சரவாக் கூச்சிங்கில் உள்ள KK Mart கிளைகளில் அத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.