கோலாலம்பூர், மார்ச் 26 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின், ஏரோட்ரெய்ன் (Aerotrain) இரயில் சேவை, இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு மார்ச்சில் மீண்டும் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு அம்சங்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் குத்தகையாளர்களின் தயார் நிலையை கருத்தில் கொண்டு, அந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அதே சமயம், ஏரோட்ரெய்ன் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள மறுசீரமைப்பு பணிகளை கருத்தில் கொண்டும் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் வசதியை உறுதிச் செய்ய ஏரோட்ரெய்ன் சேவை மிகவும் முக்கியம் என்பதால், அதன் நிலை குறித்து அறிய விரும்பிய தாப்பா தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சரவணன், மக்களவையில் முன் வைத்த கேள்விக்கு லோக் இவ்வாறு பதிலளித்தார்.
ஏரோட்ரெய்ன் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, பயணிகள், பேருந்து வாயிலாக விமான முனையத்திற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.