கோலாலம்பூர், பிப் 29 – நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து தன்னை MACC தொடர்ப கொண்டாதாகக் கூறிய வான் சைபுலின் சாடலை அசாம் பாக்கி இன்று மறுத்துள்ளார்.
MACC தலைமை ஆணையரான டான் ஸ்ரீ அசாம் பாக்கி தனது விசாரணை அதிகாரிகள், யாரையும் விசாரணைக்கு அழைக்கவில்லை குறிப்பாக தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை என்று உறுதிப்படுத்தினார்.
‘ஒருவேளை MACC என்று கூறிக்கொண்டு வேறு ஒருவர் தொடர்பு கொண்டிருக்கலாம்’ என்று அவர் இன்று நடைபெற்ற தேசிய ஊழல் எதிர்ப்பு மாநாட்டு செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக மக்களவையில் நடந்த அரசு ஆணை விவாத அமர்வின் போது, பிரதமர் அன்வாருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்குமாறு தாம் மிரட்டப்பட்டதாக வான் சைபுல் கூறினார்.
பின்னர் எந்த தரப்பினரையும் குறிப்பிடாமல், 1.7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்தலுக்கும், நீதிமன்ற வழக்கு குற்றச்சாட்டுகளை கைவிட்டதற்கும் அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் முன்வைத்த ஒரு மணி நேரத்தில், MACC அதிகாரிகள் தன்னை தொடர்பு கொண்டாதாக வான் சைபுல் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், MACC அவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும், அவர் இது குறித்து புகார் அளிக்க வேண்டும் என்று அசாம் பாக்கி கேட்டுக் கொண்டார்.