
கோலாலம்பூர், மே 25 – மலேசிய சாலை போக்குவரத்துத் துறையான ஜே.பி.ஜே கடந்த ஆண்டு முதல் நேற்று வரை, தனது ஆப்ஸ் லக்ஸரி (Ops Luxury) நடவடிக்கை மூலம் பல்வேறு வகைகளைச் சேர்ந்த மொத்தம் 1,814 ஆடம்பர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் 899 வாகனங்களும், இந்த ஆண்டில் 915 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சாலை பாதுகாப்புத்துறையின் துணை தலைமை இயக்குநர் டத்தோ ஜஸ்மனி ஷாபாவி (Jazmanie Shafawi) தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு வாகன வகைகளில் போர்ஷே மற்றும் லம்போர்கினி கார்களும், அத்துடன் தங்களின் மோட்டார் வாகன லைசென்ஸ்களை புதுப்பிக்கத் தவறியதாக அடையாளம் காணப்பட்ட பல முக்கிய வாகனங்களும் அடங்கும்.
மோட்டார் வாகன லைசென்ஸ்சுகைளை அதன் உரிமையாளர்கள் புதுப்பிக்கத் தவறுவது, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (சட்டம் 333) கீழ் ஒரு கடுமையான குற்றமாகும் என்பதை JPJ வலியுறுத்த விரும்புகிறது என்று பறிமுல் செய்யப்பட்ட வாகனங்களை நிறுத்தி வைக்கும் கோலாலம்பூர் நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்மனி கூறினார்.
தங்களது மோட்டார் வாகன உரிமங்களை (LKM) புதுப்பிக்கத் தவறும் சொகுசு வாகன உரிமையாளர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, ஜேபிஜே நாடு முழுவதும் இந்த நடவடிக்கையைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளும்.



