Latestமலேசியா

PADU-வில் பதிவதற்கு இன்றே கடைசி நாள்; இதுவரை 1 கோடி மலேசியர்கள் மட்டுமே பதிவு

கோலாலம்பூர், மார்ச் 31 – அரசாங்கத்தின் முதன்மைத் தரவுத் தளம் PADU-வில் பொது மக்கள் பதிந்துக் கொள்வதற்கும், விவரங்களைப் புதுப்பிப்பதற்கும் இன்று மார்ச் 31-ஆம் தேதியே கடைசி நாளாகும்.

இன்னும் பதியாமல் இருப்போருக்கு, இன்று இரவு 11.59 மணி வரை கால அவகாசம் உண்டு.

அறிமுகம் கண்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்குக் குறைவில்லாமல் போய்க் கொண்டிருக்கும் இந்த PADU தரவுத் தளத்தில், நேற்று நள்ளிரவு வரையில் 1 கோடியே 61 லட்சம் பேர் பதிந்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், மலேசிய மொத்த மக்கள் தொகையில் அவ்வெண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதி மட்டுமே என்பது சோகமாகும்.

3 கோடி மலேசியர்களையும் PADU-வில் பதியச் செய்ய கடந்த மூன்று மாதங்களாக அரசாங்கம் முழு வீச்சில் செயல்பட்ட போதும், வைக்கப்பட்ட இலக்கை நெருங்கக் கூட முடியவில்லை.

மிக மிகக் குறைவானவர்களே பதிந்துக் கொண்டிருப்பது, PADU அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தை பாதிக்கும் என்பதே அரசாங்கத்தின் கவலையாகும்.

காரணம், இந்த தரவுத் தளத்தில் சேகரிக்கப்படும் விவரங்களைக் கொண்டு தான், இலக்கு வைக்கப்பட்டோருக்கான உதவிகள் அவர்களைச் சென்றடைவதைய உறுதிச் செய்ய முடியும்.

அதோடு, அடிதட்டு மக்களும் அரசாங்கத்தின் அனுகூலங்களை அனுபவிக்க முடியும்.

ஏராளமானோர் PADU-வில் பதியாமல் இருப்பதற்குக் கூறும் காரணங்களில் முக்கியமானவை, பயனர்களுக்கு குறிப்பாக வயதானோருக்கு அது வசதிப்பட இருக்கவில்லை என்பதும், அடையாள உறுதிச் செய்யல் மிகவும் தாமதமாக இருப்பதுமே.

அதோடு, ஒரே தரவுத் தளத்தில் தனிநபர்களின் அனைத்து விவரங்களும் வைக்கப்பட்டிருப்பதால், அவற்றின் பாதுகாப்பு குறித்தும் மக்கள் மத்தியில் ஐயங்கள் எழவே செய்கின்றன.

போதாக்குறைக்கு, சரவாக் சபா மாநில அரசுகள் வெளிப்படையாகவே PADU-வின் பாதுகாப்பு அம்சம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, அம்மாநிலங்களில் அப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பதிவதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்படாது என பொருளாதார அமைச்சர் ரஃவிசி ரம்லி அறிவித்து விட்டதால், இன்றோடு PADU பதிவு முடிவுக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!