
கோலாலாம்பூர், மே-27 – ஆசியான் மற்றும் GCC எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்திற்கு இடையிலான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இரு வழி ஒத்துழைப்பு வாய்ப்புகள் மீதான நீண்ட கால நம்பிக்கையை இது புலப்படுத்துவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
46-ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டை ஒட்டி, இன்று கோலாலாம்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஆசியான் – GCC உச்ச நிலை மாநாட்டில் பேசிய போது பிரதமர் அவ்வாறு சொன்னார்.
தென்கிழக்காசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான வியூக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில், இந்த மாநாடு மற்றொரு மைல் கல் என பிரதமர் வருணித்தார்.
2023-ல் சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற முதலாவது உச்ச நிலை மாநாடு கட்டமைத்த அடிப்படை நோக்கத்தின் தொடர்ச்சியாக, ‘அரவணைப்பும் நிலைத்தன்மையும்’ என்ற கருப்பொருளில் இந்த இரண்டாவது மாநாடு நடைபெறுகிறது.
உலகளாயச் சூழல் சவால் மிக்கதாக மாறி வருவதால், அதனை எதிர்கொள்வதில், இதற்கு முன்பிருந்ததை விட இப்போது ஆசியான் – GCC ஒத்துழைப்பு அதிக முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதாக பிரதமர் கூறினார்.
2023-ல் 130.7 பில்லியன் டாலர் மதிப்புடன், ஆசியானின் ஏழாவது மிகப் பெரிய வாணிபப் பங்காளியாக GCC விளங்கியுள்ளது.
இம்மாநாட்டில் GCC உச்சமன்றத் தலைவரும் குவைத் நாட்டின் பட்டத்து இளவரசருமான ஷேய்க் சபாஹ் அல்-காலிட் அல்-சபாவும் கலந்துகொண்டார்.