
ஜோர்ஜ்டவுன், ஜூன்-8 – இந்திய முஸ்லீம்களுக்கு வீடு வாங்க 5 விழுக்காடு விலைக் கழிவுச் சலுகை வழங்கும் முடிவை பினாங்கு அரசாங்கம் மறு ஆய்வுசெய்யும்.
மாநில DAP தலைவர் ஸ்டீவன் சிம் அதனைத் தெரிவித்தார்.
அந்த உத்தேச கழிவுச் சலுகை சர்ச்சையானதை அடுத்து, அது குறித்து முதல் அமைச்சர் Chow Kon Yeow-வுடன் தாம் பேசியதாக அவர் சொன்னார்.
அவ்விஷயத்தை மீண்டும் மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்திற்கு கொண்டுசென்று விவாதித்து மறுஆய்வு செய்ய Kon Yeow ஒப்புக் கொண்டதாக, மனிதவள அமைச்சருமான ஸ்டீவன் சொன்னார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கும் கட்சி என்ற வகையில், DAP இன-மத பேதமின்றி அனைத்து மலேசியர்களின் நீதிக்காகவும் நலன்களுக்காகவும் போராடும்.
அதே போல் பினாங்கு அரசும் சமூக நீதியைக் கடைப்பிடித்து, வீடு வாங்க அனைத்து மலேசியர்களுக்கும் உள்ள உரிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றார் அவர்.
இந்த 5% விலைக் கழிவுச் சலுகையை வீடமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ முன்னதாக அறிவித்திருந்தார்.
இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இம்முடிவை மீட்டுக் கொள்ளுமாறு பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ ஜே. தினகரனும் வலியுறுத்தியிருந்தார்.
.