
பெட்டாலிங் ஜெயா, மே 14 – கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி, 4-ஆம் தேதி வரை, பெட்டாலிங் ஜெயாவில், மலேசிய உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில், மலேசிய தேர்வு வாரியம் (Majlis Peperiksaan Malaysia) நிர்ணயித்த, எஸ்.தி.பி.எம், புதிய தமிழ்மொழி பாடத்திட்ட பயிலரங்கு சிறப்பாக நடந்தேறியது.
இப்பயிலரங்கில், நாடு தழுவிய நிலையில், 39 எஸ்.தி.பி.எம் தமிழ்மொழி பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் ஓய்வு பெற்ற எஸ்.தி.பி.எம் தமிழ்மொழி ஆசியர்களும் உள்ளடங்குவர்.
மேலும், பள்ளிகளில் போதிக்கும் ஆசிரிர்களுக்கு மட்டுமின்றி, பிரத்யேகமாக தமிழ் மொழி பாடம் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டிய நோக்கத்தில் இப்பட்டறை மேற்கொள்ளப்பட்டது என்று மலேசிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவா், பேராசிரியர் முனைவர் ந. கந்தசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து, பயிற்சியில் கலந்துக் கொண்ட ஆசிரியர்கள் அனைவரும் தத்தம் மாணாக்கர்களுக்கு, அதே பயிற்சியினை வழங்கி, அவர்களை எஸ்.தி.பி.எம் தமிழ்மொழியில் புலமை வாய்ந்தவர்களாக உருவாக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் இவ்வாண்டு முதல் புதிய தமிழ்மொழி பாடத்திட்டத்தைக் கற்கவிருக்கின்ற மாணவர்கள் எந்த வித தயக்கமுமின்றி தமிழ்மொழி பாடத்தை எஸ்.தி.பி.எம்-இல் தேர்வு பாடமாக எடுக்கலாம் என்கின்றார் பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ஆரோக்கியசாமி அவர்கள்.
இந்தப் பட்டறையில், ஆசிரியர்களிடையே புதிய தமிழ்மொழி பாடத்திட்ட கலந்துரையாடல்கள் மட்டுமின்றி குழு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்.தி.பி.எம் தமிழ்மொழி பாடம் எடுக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் இப்பட்டறையில் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட ஆசிரியர்களிடையே, இவ்வாண்டு முதல், எஸ்.தி.பி.எம் தேர்வில் தமிழ்மொழி பாடத்தை தேர்வு பாடமாக எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என்ற நம்பிக்கை வேரூன்றி இருப்பதைக் காண முடிகின்றது.