பாரீஸ், ஜன 29 – உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 ஆம் நூற்றாண்டில் கலைஞர் லியோனார்டோ டா வின்சி அவர்களால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் 1804 ஆம் ஆண்டு முதல் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ‘Food Response’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து வந்த இரண்டு பெண்கள் அந்த ஓவியத்தின் மீது சூப் ஊற்றும் காணொளி வைரலாகியது.
அந்த பெண்கள் ஓவியத்தின் முன் நின்று கொண்டு “நமக்கு மிகவும் முக்கியமானது என்ன? கலை முக்கியமா இல்லை, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவுக்கான உரிமை முக்கியமா?” என்று கேள்வி எழுப்புவதும் அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாரீஸ் போலீசார் தெவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் குறைந்த ஊதியம் தொடங்கி பல்வேறு விவரங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஆரோக்கியமான நிலையான உணவு வேண்டும் என்பதை வலியுற்றுத்தி அவர்கள் இந்த செயலை செய்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடிக்குப் பின்னால் பத்திரமாக மோனா லிசா ஓவியம் வைக்கப்பட்டு இருந்ததால், அந்த ஓவியத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அந்த அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.