புத்ராஜெயா, நவ. 8- மலேசியாவை “இஸ்லாமியமாக்க” முயற்சிப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மறுத்ததோடு , அதற்குப் பதிலாக இஸ்லாத்தைப் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்திருக்கிறார். இத்தகைய கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை என்பதோடு அது சுயநலவாதிகளின் கருத்தாக இருப்பதாக நேற்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் பொதுச் சேவை மடானி கருத்தரங்கில் ஆற்றிய உரையின் போது அன்வார் தெரிவித்தார். நாட்டை இஸ்லாமியமயமாக்கும் அன்வாரின் முயற்சி என்று முணுமுணுப்பவர்கள் இருக்கிறார்கள். இது மிகவும் மோசமான கண்ணோட்டமாகும். இஸ்லாத்தைப் பற்றி மேலும் புரிந்துகொள்ளவும் அதைப் பயன்படுத்தவும் முயற்சிகள் நடைபெறுவதை தாம் மறுக்கவில்லை என்று அன்வார் கூறினார்.
எங்கள் மதத்தை ஏற்றுக்கொள்ள மக்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். மலேசியாவில் இஸ்லாம் தனது பங்கேற்பு மற்றும் மதிப்பின் அடிப்படையில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மலேசியா மடானி கோட்பாட்டின் அடிப்படையிலான தேசிய வளர்ச்சிக் கொள்கை கட்டமைப்பை உருவாக்க ஜாகிம் (Jakim) உதவ விரும்புவதாக ஏற்கனவே அன்வார் கூயிருந்தார். இந்த ஆண்டு அக்டோபரில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டபோது, இஸ்லாமிய விவகாரங்களை நிர்வகிப்பதற்கும் மேம்பாட்டிற்கும் 1.9 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 150 மில்லியன் ரிங்கிட் ஜாகிமிற்கு சென்றதாகவும் அன்வார் அறிவித்திருந்தார்.