கோலாலம்பூர், நவ 1 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிரான மிரட்டல்கள் உண்மையானவை என்றும், தனிப்பட்ட ஆதாயத்துக்காக அரசியல் சூழ்ச்சிகள் என்று சிறுமைப்படுத்தப்படவோ அல்லது முத்திரை குத்தப்படவோ கூடாது என போலீஸ் படைத் தலைவரான ஐ.ஜி.பி டான்ஸ்ரீ ரஸாருடீன் உசேன் தெரிவித்திருக்கிறார். அன்வாரின் பாதுகாப்புப் பிரச்சினை குறித்து, போலீஸ் படைத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை மற்றும் அவரது இயக்குநர்களுடன் தாம் விவாதித்திருப்பதாகவும் அவர் கூறினார். பாலஸ்தீனத்தின் மனிதாபிமானப் பிரச்சினை மற்றும் காஸா மக்களின் இடம்பெயர்வு குறித்து அன்வார் வெளிப்படையாக பேசியதன் காரணமாக இந்த மிரட்டல்களுக்கு உள்ளாகியிருப்பதாக ரஸாருடீன் தெரிவித்தார். மற்ற நாடுகளிலிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து அன்வாருக்கு அறிவிக்கப்பட்டிருக்கலாம், மேலும் சிறப்புப் பிரிவு அதன் வெளிநாட்டு சகாக்களுடன் தகவல்களைச் சரிபார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தகவலின் ரகசியத்தன்மையைப் பராமரிக்க நாங்கள் தொலைபேசிகளையோ அல்லது வேறு எந்த வழியையும் பயன்படுத்த மாட்டோம். பொதுமக்கள் பீதியைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட நபர்களுடன் மட்டுமே விவாதிப்போம். இந்த அச்சுறுத்தல்கள் பற்றிய முழுமையான விவரங்கள் அன்வாரிடம் மட்டுமே இருக்கும் என்றும், முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளை புண்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகவும், பொதுச் ஒழுங்கு பாதிப்பை தவிர்க்கவும் பிரதமர் அவற்றை வெளியிட வேண்டாம் என்று தேர்வுசெய்யலாம் என்றும் ரஸாருடீன் தெரிவித்தார்.