வாஷிங்டன், பிப்ரவரி 20 – நிலவின் அளவு சுருங்கி வருவதால், அதன் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படக் கூடும்.
அதோடு, விண்வெளிப் பயணங்களுக்கும் அது ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலவு சுருங்கும் போது, நிலச்சரிவுகள், நடுக்கம் உட்பட வேறு சில வகையான அழிவுகளும் ஏற்படலாம் என்பதை, அமெரிக்கா, மேரிலாந்து பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 10 கோடி ஆண்டுகளில், உடையக்கூடிய மேற்பரப்பு காரணமாக, நிலவு அதன் மையத்தை சுற்றி 45.72 மீட்டருக்கும் அதிகமான பரப்பை இழந்துள்ளது.
அதனால் ஏற்பட்டுள்ள சுருக்கத்தால், தென் துருவத்திற்கு அருகில், சந்திரனின் மேற்பரப்பின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
பூமியில் ஏற்படும் நிலநடுக்கங்களை போலவே, சந்திரனில் ஏற்படும் நடுக்கங்களுக்கும் அதன் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களே காரணம் என கருதப்படுகிறது.
அந்த நடுக்கங்கள், கட்டடங்கள், பொருட்கள் மற்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை சேதப்படுத்தும் அளவுக்கு வலுவாக இருக்கும்.
எனினும், சில வினாடிகள் அல்லது நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும் நிலநடுக்கங்களை போல் அல்லாமல், நிலவில் ஏற்படும் அந்த நடுக்கங்கள் மணிக்கணக்கில் நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.