
கோலாலம்பூர், மே-14 – பிள்ளைகளை SJKC எனப்படும் தேசிய வகை சீனப்பள்ளிகளுக்கு அனுப்பும் மலாய் பெற்றோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மற்ற பள்ளிகளைக் காட்டிலும் சீன ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதாக அவர்கள் கருதுவதே அதற்குக் காரணமாகும்.
ISEAS-Yusof Ishak கழகம் 929 பேரிடம் நடத்திய இலக்கிடப்பட்ட செயலி சார்ந்த கணக்கெடுப்பில், அது தெரியவந்துள்ளது.
பெரும்பாலும் நடுத்தர வர்க மலாய் குடும்பங்களில் 69 விழுக்காட்டினர், சீனப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு கல்வித் தேர்ச்சியே முதன்மைக் காரணம் எனக் கூறியுள்ளனர்.
அதே சமயம், கட்டளைகள் பிறப்பிக்கப்படும் மொழி அவர்களின் பரிசீலனையில் கடைசி இடத்தில் இருப்பதாக, அரசியல் ஆய்வாளரும் ஆய்வறிக்கையை எழுதியவருமான ஜேம்ஸ் சாய் கூறினார்.
பள்ளிகளில் இருக்கும் வசதிகளைக் காட்டிலும், அவை அமைந்திருக்கும் இடம், கட்டொழுங்கு உள்ளிட்ட காரணங்களும் மலாய்க்கார பெற்றோர்களுக்கு முக்கியமாகப் படுகின்றன.
இந்நிலையானது, மலாய் பெற்றோர்களிடையே SK எனப்படும் தேசிய பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த நம்பிக்கை சரிந்து வருவதை காட்டுகிறது.
ஒருவேளை, தேசியப் பள்ளிகளில் கல்வித் தரம் சிறப்பாக இருந்தால், நிச்சயமாக பிள்ளைகளை அங்கு தான் அனுப்புவோம் என ஏராளமான பெற்றோர்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளதையும் ஜேம்ஸ் சாய் சுட்டிக் காட்டினார்.
சீனப்பள்ளிகள் மீதான மலாய்க்கார பெற்றோர்களின் ஈர்ப்பால், 1990-ஆம் ஆண்டுகளில் சீன ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 3 முதல் 6 விழுக்காடாக இருந்த சீனர் அல்லாத மாணவர்களின் விகிதாச்சாரம், 2020-ல் 20 விழுக்காட்டை நெருங்கியுள்ளது.
ஆனால் இதில் ஒரு நல்லதும் இருக்கவே செய்கிறது.
அதாவது சீனப் பள்ளிகளுக்கு மலாய் மாணவர்கள் படையெடுப்பதால், தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டுமென்ற அழுத்தங்கள் வலுவிழந்து போகலாமென ஜேம்ஸ் சாய் கூறுகிறார்