கோலாலம்பூர், பிப் 14 – பிப்ரவரி 26ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே இருக்கும் இவ்வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியிடமிருந்து நாடாளுமன்றம் இன்னும் பெறவில்லை. தமது அலுவலகம் பரிசீலிக்கக்கூடிய தீர்மானத்தை முன்மொழிவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையாக இருந்தாலும் இதுவரை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பெறவில்லையென மக்களவை சபாநாயகர் ஜோஹாரி அப்துல் தெரிவித்திருக்கிறார்.
தீர்மானத்தை முன்மொழிவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை என்பதால் நாடாளுமன்ற விதிமுறையை நாங்கள் பின்பற்றுவோம். உண்மையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிவார்கள் அல்லது அவர்களது அரசியல் நாடகத்திற்கான அறிக்கையை விட்டனரா என்பது அவர்களுக்குத்தான் தெரியும் என ஜோஹாரி சுட்டிக்காட்டினார்.