ஜோர்ஜ் டவுன், டிசம்பர் 29 – பினாங்கு, ஜாலான் பர்மாவிலுள்ள, பேரங்காடி ஒன்றின், மின்தூக்கி கதவில் தலை சிக்கி, உயிரிழந்த பராமரிப்பு தொழிலாளி ஒருவரின் முதலாளி, 1994ஆம் ஆண்டு, வேலையிட சுகாதார – பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
JKKP – பினாங்கு மாநில வேலையிட சுகாதார – பாதுகாப்பு துறை, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியுள்ளது.
அந்த விசாரணை முழுமைப்பெறும் வரையில், சம்பந்தப்பட்ட மின்தூக்கியின் பராமரிப்பு பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக, பினாங்கு JKKP இயக்குனர் ஹைரோசி அஸ்ரி தெரிவித்தார்.
வேலையிடத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் முதலாளிமார்களின் பொறுப்புக்கு உட்பட்டது. அதனால், அச்சம்பவம் தொடர்பில், 1994ஆம் ஆண்டு, வேலையிட சுகாதார – பாதுகாப்பு சட்டத்தின் 15வது பிரிவின் கீழ், விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அதே சமயம், அவ்விபத்துக்கான காரணத்தை கண்டறிய, உள்விசாரணை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட முதலாளியும் பணிக்கப்பட்டுள்ளதாக, அஸ்ரி சொன்னார்.
முன்னதாக, பழுதடைந்த மின்தூக்கியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது ஆர் தினேஷ் குமார், அதன் கதவில், தலை சிக்கியதில், கழுத்து எழும்பு முறிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.