லஹாட் டத்து, டிசம்பர் 26 – சபா லஹாட் டத்து, கம்போங் பெர்பாடுவான் கிராமத்தில், யானைக் கூட்டம் தாக்கியதில், 90 வயது முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது 61 வயது மனைவி, கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு மணி 10 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததை, லஹாட் டத்து போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் டாக்டர் ரோஹன் ஷா அகமது உறுதிப்படுத்தினார்.
லோபிஸ் ஜூபின் எனும் அந்த முதியவரும், டலமா ஹமீட் எனும் அவரது மனைவியும், தங்களின் மரவள்ளிக்கிழங்கு தோட்டத்திலுள்ள, குடிசையில், நேற்றிரவு காவல் பணிக்காக தங்கி இருந்த போது, அங்கு வந்த 12 யானைகள் அவர்களை தாக்கின.
யானைகளின் வருகையை உணர்ந்த அவர்கள், குடிசையிலிருந்து வெளியாகி தப்பி ஓட முற்பட்ட போதும், அதில் ஒரு யானை அம்முதியவரை துரத்தி சென்று தாக்கியதோடு, மிதித்து கொன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட யானைகளை அடையாளம் காண, அதிகாரிகள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுபப்பட்டுள்ளதாக, லஹாட் டத்து வனவிலங்கு துறை அதிகாரி சில்வஸ்டர் சைமன் தெரிவித்தார்.