புதுடெல்லி, டிசம்பர் 27 – இந்தியா, மும்பை விமான நிலையத்தில், பாரம்பரிய இந்திய உணவான மசாலா தோசை ஒன்று, எப்படி 600 ரூபாய் அல்லது 33 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டது என இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தோசை அல்லது மசாலா தோசை, இந்தியாவிலுள்ள, அனைத்து உணவகங்களிலும் எளிதாக கிடைக்கக் கூடிய உணவாகும். மலேசியாவிலுள்ள, இந்தியர்களின் கடைகளிலும், மாமாக் கடைகளிலும் அதனை உண்ணலாம்.
சாதாரணமாக அதன் விலை, சுமார் 50 ரூபாய் அல்லது இரண்டு ரிங்கிட் 70 சென் மட்டுமே.
எனினும், அண்மையில் மும்பை விமான நிலையத்தில், அந்த பாரம்பரிய உணவு 33 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது, விவாதத்தை தூண்டியுள்ளது.
‘Chef Don India’ எனும் இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ள காணொளியில், “செப்” ஒருவர் தோசையை சுடுகிறார். அதன் பின்னர் அந்த உணவகத்திலுள்ள, கணினிமயமாக்கப்பட்ட மெனுவின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வெண்ணெய் ஊற்றப்பட்ட ஒரு மசாலா தோசையின் விலை 620 ரூபாய் அல்லது 34 ரிங்கிட் 50 சென் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மும்பை விமான நிலையத்தில், தோசையைக் காட்டிலும் தங்கம் விலை குறைவாக இருக்கும் போல” என இணைய பயனர்கள் சிலர் பதிவிட்டுள்ளனர்.