
பஹாவ், ஏப்ரல்-16-நெகிரி செம்பிலான் பஹாவ், செயின்ட் ஹெலியர் தமிழ்ப் பள்ளியில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த இணைக் கட்டடப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
6 வகுப்பறைகள் மற்றும் ஒரு கணினி அறையைக் கொண்ட இந்தக் கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் J. அருள் குமார் கூறினார்.
கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்திருக்க வேண்டிய இத்திட்டம், பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நின்றது.
இந்த நீண்ட காலப் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில், கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ அண்மையில் இப்பள்ளிக்கு வருகை தந்து, பணிகளை விரைந்து முடிக்க உறுதியளித்திருந்தார்.
அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக அரசாங்கம் 800,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
தற்போது பள்ளி மேலாளர் வாரியம் எஞ்சியப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அருள் சொன்னார்.
அவர், இன்று காலை சக ஆட்சிக் குழு உறுப்பிரான Teo Kok Seong, ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ Zaidi உள்ளிட்டோருடன் நேரில் சென்று கட்டடப் பணியின் முன்னேற்றத்தைப் பார்வையிட்டனர்.
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த உதவும் இந்த புதிய வசதிகள், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நிறைவேறவிருப்பது பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



