உலு சிலாங்கூர், டிசம்பர் 11 – சிலாங்கூர், செரெண்டாவிலுள்ள, கியாம்பாங் ஏரியில் முதலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதனை பிடிக்க, பெர்ஹிலிடான் ‘PERHILITAN’ – மாநில வனவிலங்கு – தேசிய பூங்கா பாதுகாப்பு துறை அதிகாரிகள், பொறிகளை நிறுவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இம்மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட அந்நடவடிக்கை, அந்த வனவிலங்கு பிடிபடும் வரை தொடரப்படுமென, மாநில பெர்ஹிலிடான் இயக்குனர் வான் முகமது அடிப் வான் முகமட் யூசோ தெரிவித்தார்.
குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள கியாம்பாங் ஏரி, பொதுபோக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பிரசித்தி பெற்றது. எனினும், அந்த ஏரியில் முதலையின் நடமாட்டம் இருப்பது குறித்து, பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்திருப்பதை அடுத்து, அதனை பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதே சமயம், கண்காணிப்பு நடவடிக்கையின் வாயிலாக, அந்த ஏரியில் சுமார் ஐந்து அல்லது ஆறடி நீளமுள்ள முதலை ஒன்று இருப்பதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக, அடிப் சொன்னார். அதனால், அந்த முதலை பிடிபடும் வரையில், ஏரியில் மீன் பிடிக்க செல்லும் பொதுமக்கள், கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அடிப் கேட்டுக் கொண்டுள்ளார்.