கோலாலம்பூர், மார்ச் 19 – இணையப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றுவது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.
அமைச்சரவையின் உத்தரவின் பேரில், தொடர்புத் துறை அமைச்சும், பிரதமர் துறையின் கீழுள்ள சட்ட விவகாரப் பிரிவும் இணைந்து அந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றன.
தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ ச்சிங் மக்களவையில் அதனைத் தெரிவித்தார்.
ஆய்வுகள் முடிந்து அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததும், மக்களவையின் அடுத்த அமர்வின் போது அச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என அவர் கோடி காட்டினார்.
இவ்வேளையில், சமூக ஊடகங்களில் சட்டத்திற்கு முரணான எந்தவொரு உள்ளடக்கத்தையும் கண்டறிந்த மாத்திரத்தில், அமுலாக்கத் தரப்பு நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
அச்சமயத்தில் எந்தவொரு தனிநபரின் புகாருக்கும் காத்திருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் MCMC -க்கு அதிகாரம் உண்டு என தியோ நீ ச்சிங் சொன்னார்.
இணையக் கெடுதல்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் இருப்பது போன்று மலேசியாவிலும் இணையப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றும் திட்டமேதும் அரசாங்கத்திற்கு இருக்கிறதா என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு துணை அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.