திரெங்கானு, பிப் 11 – டூங்குனில் பல தனிநபர்களின் வங்கி சேமிப்பு கணக்குகளிலிருந்து பணம் காணாமல் போனதற்கும் மத்திய அரசின் முதன்மை தரவு தளமான பாடுவிற்கும் (PADU) எந்தவித தொடர்பும் இல்லை என்று திரெங்கானு காவல் துறை தலைவர் மஸ்லி மஸ்லான் தெரிவித்தார்.
இது பண மோசடிக் கும்பலின் செயலாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், திரெங்கானு தபுங் ஹாஜி இஸ்லாம் வங்கி கணக்குகள் மூலம் பணம் பிடித்தம் செய்யப்பட்டது போல் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் கூறுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாம் வங்கி அல்லது தபுங் ஹாஜி மூலம் தவறான இணைப்பைக் கிளிக் செய்திருந்தால், மோசடி செய்பவர்கள் கடவுச்சொல்லைக் கண்டறிந்து பணத்தைத் திருட இயலும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டூங்குனில் சில தனிநபர்கள் பாடு முதன்மை தரவு தளத்தில் இணைக்கப்பட்டதன் மூலம் வங்கிக் கணக்கில் பணத்தை இழந்ததாக சமூக ஊடகங்கள் மூலம் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.