கோலாலம்பூர், ஜன 10 – பிப்ரவரி 26ஆம்தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியும்படி எதிர்க்கட்சிக்கு அரசாங்கத்தை ஆதரிக்கும் பாசிர் கூடாங் பி.கே,ஆர் நாடாளுமன்ற உறுப்பினரான ஹசான் கரீம் சவால் விடுத்துள்ளார். பிரதமர் அன்வார் சட்டப்பூர்வ பிரதமர் தானா என்பதை சோதிப்பதாக இருந்தால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கூறினார். கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 43 ஆவது பிரிவின் உட்பிரிவு (4) இன் கீழ் அந்த தீர்மானத்தை தாக்கல் செய்யலாம்.
நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு சமர்பித்துவிட வேண்டும் என்பதை ஹசான் கரீம் நினைவுபடுத்தினார். உண்மையிலேயே அன்வாரை வீழ்த்துவதில் எதிர்க்கட்சி உறுதியாக இருந்தால் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு முன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என அவர் தெரிவித்தார்.