புதுடெல்லி, டிசம்பர் 28 – இந்தியா, ஆக்ரா மாநில நெடுஞ்சாலையில், அடர்ந்த மூடுபனியால் பார்க்கும் தூரம் குறைந்ததை அடுத்து, பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
அவ்விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த பரபரப்புக்கு மத்தியில், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கால்நடை டிரக் ஒன்றிலிருந்து, கோழிகளை எடுத்துச் செல்ல மக்கள் குவிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
டிரக் கவிழ்ந்ததில் அதிகமான கால்நடைகள் மடிந்து சிதறிக் கிடந்தன.
எனினும், அந்த சந்தர்ப்பத்தை தவறவிடாத பொதுமக்கள், அவற்றை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து கம்பி நீட்டினர்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று, மடிந்து கிடந்த கோழிகளை, கோனிப் பைகளில் போட்டு எடுத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதிலும் போலீசார் கவனம் செலுத்திக் கொண்டிருந்த சமயத்தில், மனிதாபிமானம் இல்லாத ஒரு பகுதி மக்கள் கோழிகளை கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதில் சிலர் கோழிகளை எடுத்துச் செல்வதற்காகவே, தங்கள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வந்தவர்கள் எனவும், சிலர் கைகளில் இரண்டு அல்லது மூன்று கோழிகளுடன் புன்னகையுடன் சம்பவ இடத்தை விட்டு அகன்று சென்றதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.