கோலாலம்பூர், ஜனவரி 29 – நாட்டின் 17-வது பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் வருகை விழாவையொட்டி, வரும் புதன்கிழமை, தலைநகரிலுள்ள, ஐந்து சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும்.
அன்றைய நாள், காலை மணி 9.30 தொடங்கி, சம்பந்தப்பட்ட சாலைகள் கட்டங்கட்டமாக மூடப்படும் என, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மாஜிட் தெரிவித்தார்.
ஜாலான், சுல்தான் அப்துல் ஹலிம், ஜாலான் கூச்சிங், ஜாலான் துன் ரசாக், ஜாலான் டமன்சாரா மற்றும் ஜாலான் டிராவர்ஸ் ஆகியவையே அந்த ஐந்து சாலைகள் ஆகும்.
முன்னதாக, சுபாங்கிலுள்ள, அரச மலேசிய வான் படைத் தளம் வந்தடையும் நாட்டின் 17-வது பேரரசரின் புறப்பாடு விழா, NKVE நெடுஞ்சாலை, PLUS நெடுஞ்சாலை, ஜாலான் சுல்தான் அப்துல் ஹலிம் ஆகிய சாலைகளையும் உட்படுத்தி இருக்குமென, அலாவுடின் சொன்னார்.
சம்பந்தப்பட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, விழா நிறைவடைந்ததும் போக்குவரத்துக்கு திறக்கப்படும்.
அதனால், வாகன நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என அலாவுடின் வாகனமோட்டிகளிடம் கேட்டுக் கொண்டார்.
அதோடு, பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதல் அல்லது உத்தரவை பின்பற்றி நடக்குமாறும் வாகனமோட்டிகளுக்கு நினைவுறுத்தப்படுகின்றது.
நாளையோடு, தனது ஐந்தாண்டுகால ஆட்சியை நிறைவுச் செய்யும் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லாவுக்கு பதிலாக சுல்தான் இப்ராஹிம் அரியணை அமரவுள்ளார்.
வரும் புதன்கிழமை தொடங்கி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டின் 17-வது பேரரசராக சுல்தான் இப்ராஹிம் முடிசூடுவார்.