கோலாலம்பூர், பிப் 6 – வர்த்தகர்கள் மொக்ஸானி மகாதீரும், மிர்ஸான் மகாதீரும் சொத்து விவரங்களை பிரகடனப்படுத்த தவறினால் அவர்கள் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என எம்.ஏ.சி.சி கூறியுள்ளது. சொத்துக்களின் விவரங்களை பிரகடனப்படுத்துவதற்கான பாரங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த பாரங்களை திட்டமிட்டபடி அவர்கள் ஒப்படைக்காவிட்டால் மொக்ஸானி மற்றும் மிர்ஸான் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்படும் என எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார். அவ்விருவரும் சொத்துக்களை பிரகடனம் செய்யத் தவறினால் அதற்காக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படும். ஆனால் எங்களது பிரதான விசாரணைக்கு சில காலம் பிடிக்கும் என அசாம் பாக்கி கூறினார். சொத்துக்கள் பிரகடன பாரம் வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் அவர்கள் அந்த பாரங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.