மலாக்கா, ஜனவரி 8 – மலாக்கா வனவிலங்கு பூங்காவிலுள்ள, பெங்கால் வெள்ளைப் புலி ஒன்று மெலிந்து வற்றலும் தொற்றலுமாக காணப்படுவது குறித்து, பார்வையாளர்கள் சிலர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதோடு, அந்த கொடிய விலங்கின் பரிதாபமான நிலையை காட்டும், காணொளி ஒன்றும் கடந்த சனிக்கிழமை தொடங்கி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
Nurul Z எனும் டிக் டொக் கணக்கில் அந்த 22 வினாடி காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வேளை; அந்த விலங்கை அதன் அசலான வாழ்விடத்திலேயே கொண்டு விட்டுவிடுமாறும் அவர் அந்த பதிவின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த காணொளிக்கு கீழ் இதுவரை ஐநூறுக்கும் அதிகமான கருத்துகள் பதிவிடப்பட்டுள்ள வேளை; அதில் பலர் அந்த புலியை முறையாக பராமரிக்க தவறிய தரப்பினரை கடுமையாக சாடியுள்ளனர்.
அதில் ஒருவர், குடும்பத்தோடு மலாக்கா வனவிலங்கு பூங்காவிற்கு செல்ல நானூறு ரிங்கிட் வரை செலவிட்டதாகவும், ஆனால், அந்த புலியை பார்த்த பின் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதாகவும் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதனால், மலாக்கா வனவிலங்கு பூங்காவிலுள்ள விலங்குகளை முறையாக பராமரிக்க அதன் நிர்வாகம் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பலர் கூறியுள்ளனர்.