தெலுக் இந்தான், பிப்ரவரி 9 – ஒன்றாம் ஆண்டு மாணவியிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக, முன்னாள் பாதுகாவலன் ஒருவனுக்கு எதிராக இன்று பேராக், தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 46 வயது முஹமட் ரிட்சுவான் மாமுட் எனும் அவ்வாடவன், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான்.
கடந்த மாதம் 31-ஆம் தேதி, காலை மணி 6.45 வாக்கில், ஹிலிர் பேராக்கிலுள்ள ஆரம்ப பள்ளி ஒன்றின் வகுப்பறைக்கு முன், ஏழு வயதான அம்மாணவியை தடவியதோடு, அவரது அந்தரங்க உறுப்பை பிடித்து ஆபாசமாக நடந்து கொண்டதாக, அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இன்று அவ்வாடவனை எட்டாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் விடுவிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
இவ்வழக்கு விசாரணை மார்ச் எட்டாம் தேதி செவிமடுக்கப்படும்.