
ஈப்போ, பிப்ரவரி 5 – சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில் பாராங் கத்தியைப் பிடித்தபடி அவதூறு சைகை காட்டிய நபரைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவு (CID) அதிகாரிகள் அந்த நபரை கண்டறிந்து விசாரணைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று மாவட்ட காவல்துறை தலைவர் Assistant Commissioner Abang Zainal Abidin தெரிவித்தார்.
ஜனவரி 15 ஆம் தேதியன்று, நடந்த இந்த சம்பவத்தின் 25 விநாடி காணொளி, நேற்று முதல் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது. காணொளி பதிவு செய்யப்பட்ட போது, அந்த ஆடவன் ஒரு வாகனத்திற்குள் இருந்து பாராங் கத்தியை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
நேரடியாக மிரட்டல் விடுக்கப்படவில்லை என்றாலும், இந்த செயல் பொதுமக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
மேலும், தனது செயல்களை கண்டித்த ஒருவரை நோக்கி அந்த நபர் அவதூறு சைகை காட்டியதும் காணொளியில் பதிவாகியுள்ளதாகவும், இதுவே சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்களை தூண்டியதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நடந்த இடம் தெளிவாக காணொளியில் தெரியவில்லை என்றாலும், ஈப்போவின் பெக்கான் பாரு பகுதியில் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக எந்த போலீஸ் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.
குற்ற மிரட்டல் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.



