
சிரம்பான், ஜூன் 3 – நேற்று அதிகாலையில், தாமான் புக்கிட் ஸ்ரீ செனாவாங்கிலிருக்கும் ஆடவர் ஒருவரின் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய ‘டொயோட்டா வியோஸ்’ மற்றும் ‘பெரோடுவா மைவி’ ஆகிய வாகனங்கள், ‘புரோட்டான் பெர்சோனா’ வாகனமொன்றால் மோதப்பட்டு படு சேதமடைந்துள்ளன.
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 22 வயது ஆடவன், எதிர்தரப்பில் படு வேகமாக வந்த வாகனமொன்று, தன்னுடைய வாகனத்தை மோதிவிடும் என்றச்சத்தில் தனது பாதையை விட்டு சற்றே விலகி சென்றதாகவும், அதே நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, அவ்விரு வாகனங்களையும் மோதியதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதென்று சிரம்பான் துணை மாவட்ட காவல்துறைத் தலைவர், முகமது அம்ருல் யாசித் அனுவார் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் தங்களுடைய புகார்களை காவல் துறையினரிடம் அளித்துள்ள நிலையில் இவ்வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.