
கோலாலம்பூர், ஜூன்-5 – அரசாங்கத்தில் ‘மலாய்க்காரர்களின் அதிகாரத்தை மீட்டெடுப்போம்’ எனக் கூறி மீண்டும் புறப்பட்டுள்ளார் 100 வயது முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் மொஹமட்.
அதற்காக ‘மலாய்க்காரர்களின் செயலகம்’ (Sekretariat Orang Melayu) என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை அவர் உருவாக்கியுள்ளார்.
அதில் அம்னோ உறுப்பினர்களும் தாராளமாக வந்திணையலாம்; அவர்களை கட்சிக்காரர்களாக பார்க்காமல் மலாய்க்காரர்களாக ஏற்றுக் கொள்வோம் என, புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் மகாதீர் பேசினார்.
மற்றொரு முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான தான் ஸ்ரீ முஹிடின் யாசின், பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ துவான் இப்ராஹிம் துவான் மாட் உள்ளிட்டோர் அதில் கலந்துகொண்டனர்.
பெர்சாத்து, பாஸ் ஆகியக் கட்சிகளையும் உள்ளடக்கிய இந்த ‘மெகா’ கூட்டணி, ஓர் அரசியல் கூட்டணி அல்ல என மகாதீர் தெளிவுப்படுத்தினார்.
அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மலாய்க்காரர்களின் ‘எதிர்காலத்தைக் காப்பாற்ற’ மலாய்க்காரர்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதே இம்முயற்சி என்றார் அவர்.
நடப்பு அரசாங்கத்தின் கீழ் மலாய்க்காரர்களின் அதிகாரம் ஆட்டம் கண்டுள்ளது; எதிர்த்து பேசினால் 3R சட்டம் பாய்கிறது.
உண்மையை பேச மக்களுக்கு இங்கு சுதந்திரம் இல்லை.
அதோடு, எல்லா மொழிகளும் சகஜமாக முன்னிலைப்படுத்தப்படுவதால், தேசிய மொழியான மலாயின் மாண்பு கட்டிக் காக்கப்படுவதில்லை.
மலாய்க்காரர்களைப் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகளும் கண்டுகொள்ளப்படுவதில்லை என மகாதீர் சரமாரியாக குற்றம் சாட்டினார்.
எனவே மலாய்க்காரர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்; அதிகாரம் கையை விட்டு போவது அவர்களுக்கு புரிய வைக்கப்பட வேண்டும்.
அதைத்தான் இப்புதிய முன்னெடுப்பு செய்யவிருப்பதாக மகாதீர் சொன்னார்.