
கோலாலாம்பூர், ஏப்ரல்-22-பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள RM500,000 ஊழல் புகார் குறித்த விசாரணையின் தற்போதைய நிலையைப் பகிரங்கமாக அறிவிக்குமாறு, பண்டான் தொகுதி
பி.கே.ஆர் மகளிர் பிரிவு போலீஸாருக்கும் ஊழல் தடுப்பு ஆணையமான MACC-க்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியது அவசியம் என்று அப்பிரிவின் தலைவி Roasiah Ramli தெரிவித்தார்.
ரஃபிஸி மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு அவரது நற்பெயருக்கும், கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், விசாரணையை விரைவுபடுத்தி அதன் முடிவை அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பண்டான் தொகுதியில் ரஃபிஸிக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில், இந்தப் புகார் குறித்த உண்மை நிலையை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மகளிர் பிரிவு கருதுகிறது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்றால் அதனைத் தள்ளுபடி செய்யவும், உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் Roasiah கேட்டுக் கொண்டார்.
எனவே, இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை போலீஸார் மற்றும் SPRM விரைவில் வெளியிடும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
NexG Bhd நிறுவனத்தின் உரிமையாளரிடமிருந்து தாம் 500,000 ரிங்கிட் ஊழல் பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஃபிஸி முன்னதாக திட்டவட்டமாக மறுத்தார்.



