
கோலாலம்பூர், ஜூன்-16-இணையத்தில் விற்கப்படும் இனிப்பு பலகாரங்கள் மற்றும் மிட்டாய்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை போலீசார் எந்தவொரு புகார்களோ அல்லது அறிக்கைகளை பெறவில்லை.
இன்றுவரை, சந்தையில் கிடைக்கும் அல்லது இணையம் வாயிலாக விற்கப்படும் இனிப்பு பலகாரங்கள் மற்றும் இதர இனிப்பு மிட்டாய்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள், குறிப்பாக போதைப்பொருட்கள், இருப்பதாக எந்தவொரு பாதிக்கப்பட்ட நபரும் புகார் அளிக்க முன்வரவில்லை அல்லது கண்டறியவில்லை என்று போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநர் டத்தோ உசேய்ன் உமர் கான் ( Hussein Omar Khan ) தெரிவித்தார்.
பயனீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இது தொடர்பான எந்தவொரு பிரச்னையையும் கண்காணிக்கவும் விசாரிக்கவும் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை எப்போதும் சுகாதார அமைச்சு , இராசயனத்துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நிரூபிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படும் வரை, இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை எனக் கருத முடியாது என அவர் கூறினார்.
முன்னதாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குக் கவனச் சிதறலையும், நினைவாற்றல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்று கூறப்படும் பொருட்களைக் கொண்ட பல்வேறு வகையான பலகாரங்கள் மற்றும் மிட்டாய்கள் ஒரு பேரங்காடியில் விற்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.



