
கோலாலாம்பூர், மே-11-மலாய்க்காரர்கள் அரசாங்கத்தின் உதவிக்காக மட்டுமே காத்திருக்காமல், பொருளாதார ரீதியாக முன்னேற சுயமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் என, புரோட்டான் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி தான் ஸ்ரீ Syed Zainal Abidin Syed Tahir வலியுறுத்தியுள்ளார்.
மலாய் சமூகத்தின் பிரச்னைகள் குறித்து நடைபெற்ற வட்டமேசை விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், சமூகத்தின் பின்னடைவுக்குப் புறச் சூழலை மட்டும் குறை கூறாமல், தங்களின் பலவீனங்களையும் அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.
“உங்களுக்குத் தேவையானதை நீங்களே தேடிக்கொள்ளுங்கள், எதற்கும் காத்திருக்காதீர்கள்” என்ற தனது தந்தையின் அறிவுரையையும் Syed Zainal பகிர்ந்துகொண்டார்.
என்றாலும், மலாய் சமூகம் இலவச உதவிகளை எதிர்பார்க்கவில்லை என்றும், மாறாகச் சரியான முறையில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளையே எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், அரசாங்கத்தின் பெரும் பாதுகாப்பைப் பெற்று வளர்ந்த புரோட்டான் நிறுவனத்தின் முன்னாள் தலைவரே இக்கருத்தைக் கூறியிருப்பது, சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தலைமையில் தொடங்கப்பட்ட இந்த வட்ட மேசை கலந்துரையாடலில், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் ஒன்று கூடி, பொருளாதாரம், தலைமைத்துவம் மற்றும் அடையாளம் குறித்த கவலைகள் மத்தியில் மலாய் சமூகத்தின் திசையை விவாதித்தனர்.



