கோலாலம்புர், பிப் 25 – உள்நாட்டு வர்த்தகச் சமூகம் வெளிநாட்டு தொழிலாளர்களைவிட உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில்தான் ஆர்வமாக இருக்கிறது என ‘FMM’ எனப்படும் மலேசிய உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைவர் டான்ஸ்ரீ சோ தியன் லாய் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும் உள்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் போதுமான அளவில் இல்லையென அவர் சுட்டிக்காட்டினார். உள்நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுதான் எங்களின் முதல் முன்னுரிமையாகும்.
வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பது குறைந்த செலவாகவோ அல்லது அவ்வளவு எளிதான காரியமோ அல்ல. அடிக்கடி மாறிவரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கொள்கைகள் மற்றும் அனைத்துலகத் தொழிலாளர் தரங்களை நிறைவு செய்ய வேண்டியுள்ளது என்பதையும் சோ தியன் லாய் தெரிவித்தார். நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு போதுமான உள்நாட்டு தொழிலாளர்கள் இல்லை என்பதுதான் உண்மையாகும். பொதுவாகவே சாதாரண பொது வேலைகளை செய்வதில் உள்நாட்டினர் விரும்புவதில்லை என்றும் சோ தியன் லாய் கூறினார்.