
வாஷிடங்டன், மே-25-ஈரானுடன் எந்தவொரு தற்காலிக உடன்படிக்கையையும் அவசரமாகச் செய்துகொள்ளக் கூடாது என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் முழுமையாக நீடிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ‘அதிகபட்ச அழுத்தக் கொள்கை’ குறித்துப் பேசிய ட்ரம்ப், வாஷிங்டன் நிர்வாகம் பலவீனமான அல்லது அவசரக் கால ஒப்பந்தங்களுக்கு ஒருபோதும் உடன்படாது என்றார்.
கடுமையான பொருளாதார மற்றும் கடல்சார் தடைகள் எவ்வித விதிவிலக்குகளும் இன்றி தொடர்ந்து தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும், ஈரான் முழுமையாகப் பணியும் வரை அதில் மாற்றம் இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அமெரிக்காவின் இந்த நிபந்தனை வெறும் அணுசக்தி விவகாரத்தோடு நின்றுவிடாமல், ஈரானின் அதிவேக ஏவுகணை தயாரிப்புகள் மற்றும் ட்ரோன் ஏற்றுமதி அமைப்புகளை நிரந்தரமாக முடக்குவதையும் உள்ளடக்கியுள்ளது.
ஈரான் தனது அனைத்துலக செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளும் வரை அதன் மீதான பொருளாதார நெருக்குதல்கள் இன்னும் அதிகரிக்கப்படும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த பிடிவாதப் போக்கு, மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



