
சிரம்பான், ஜூலை-28 – நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் குறித்து DAP-யைச் சேர்ந்த முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் வெளியிட்டுள்ள கணிப்புகளை நிராகரித்துள்ள, பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், அவர் ஒரு “ஜோசியர்” போலச் செயல்படுவதாகச் சாடியுள்ளார்.
36 சட்டமன்றத் தொகுதிகளில், பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் இடையே செய்துகொள்ளப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமற்ற கூட்டணியானது 23 முதல் 25 இடங்களைக் கைப்பற்றக்கூடும் என்றும், பக்கத்தான் ஹராப்பானுக்கு 11 முதல் 13 இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கியான் மிங் கணித்திருந்தார்.
அதிலும் பி.கே.ஆருக்கே ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைக்குமென அவர் சொன்னார்.
ஆனால், இந்தக் கணிப்பை முற்றிலுமாக நிராகரித்த ரமணன், அரசியல் கூட்டணிகள் இதுபோன்ற முன் கூட்டியூகங்களை நம்பியிருக்காமல், மக்களுக்குச் சேவை செய்வதிலும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என், செனாவாங்கில் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது வலியுறுத்தினார்.
ஜோகூர் தேர்தலில் பாரிசான் அமோக வெற்றிப் பெறும் என்ப கியான் மிங்கின் கணிப்பு பலித்த ஒரே காரணத்திற்காக, அடுத்து வரும் எல்லா தேர்தல்களிலும் அப்படியே நடக்குமென்ற கட்டாயம் இல்லை என்றார் அவர்.
ஒற்றுமை அரசாங்கத்தின் நிர்வாகத்திலும் சாதனைகளிலும் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த அவர், தேர்தலின் போது தலைவர்களின் செயல்பாடுகளைப் பார்த்துதான் மக்கள் வாக்களிப்பார்களே தவிர, அரசியல் கணிப்புகளைப் பார்த்து அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.



