
பெய்ஜிங், ஜூன்-16-உலகளவில் நவீன உளவு யுத்தங்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள வேளையில், கடல் அலைகளுக்கு அடியில் ஒளிந்திருக்கும் ஒரு விசித்திரமான அச்சுறுத்தல் குறித்துச் சீனா பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு உளவு நிறுவனங்கள், அந்நாட்டின் ஆழ்கடல் இரகசியங்களைக் கண்டறிந்து வரைபடமாக்க, கடல்வாழ் உயிரினங்கள் போல வேடமிட்ட அல்லது ஆமைகள் போல வடிவமைக்கப்பட்ட அதிநவீன “ஒற்றன் ஆமை” கருவிகளைப் பயன்படுத்தி வருவதாக, சீன தேசிய பாதுகாப்பு அமைப்பின் கூறிக் கொண்டுள்ளது.
கடல் நீரோட்டங்களோடு இயல்பாக மிதக்கும் இந்த உயர்தொழில்நுட்பக் கருவிகள், சீனாவின் கடற்படை நடமாட்டங்களைக் கண்காணிக்கவும், நீர்மூழ்கிக் கப்பல்களின் யுக்திகளைத் திருடவும் பயன்படுத்தப்படுவதாக பெய்ஜிங் குற்றம் சாட்டியுள்ளது.
இத்தகைய மறைமுக _sensor_ மற்றும் கண்காணிப்புக் கருவிகள் சீனாவின் தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக விளங்குவதோடு, எதிர்கால நீருக்கடிப் போர்க்களங்களுக்கு வெளிநாட்டு சக்திகளைத் தயார்படுத்த உதவுவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இதன் காரணமாக, கடலோரப் பகுதி மக்களும், மீனவர்களும் விழிப்புடன் இருக்குமாறும், கடலில் ஏதேனும் அடையாளம் தெரியாத விசித்திரமான கண்காணிப்புக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டால் அவற்றை உடனே அரசிடம் ஒப்படைக்குமாறும் சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
தொழில்நுட்ப உளவு யுத்தம் இப்போது நிலப்பரப்பைத் தாண்டி ஆழ்கடலிலும் தீவிரமடைந்துள்ளது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.



